Published : 21 Sep 2019 11:40 AM
Last Updated : 21 Sep 2019 11:40 AM

பாகிஸ்தானில் 6 மாதத்தில் 1,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் வன்முறை: ஆய்வறிக்கையில் தகவல்

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் கடந்த ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை, 6 மாதத்தில் மட்டும் 1,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதாக துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு மீது, காஷ்மீரைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் அதிகம் கவனம் செலுத்திவருவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் அதேவேளையில் இன்னொரு பக்கம் மக்களிடம் வறுமை, வேலையின்மை உள்ளிட்ட ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

மேலும் பாகிஸ்தானில் குந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்று இந்த ஆண்டு தொடங்கி ஜூன் மாதம் வரை 6 மாதத்தில் மட்டுமே 1,300 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து 'தி நியூஸ் இண்டர்நேஷனல்’ இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

''சாஹில் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் தொகுத்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில் 729 சிறுமிகளும் 575 சிறுவர்களும் ஒருவித பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையின்படி பஞ்சாபில் 652, சிந்துவில் 458, பலுசிஸ்தானில் 32, கைபர் பக்துன்க்வாவில் 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர, 13 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் இஸ்லாமாபாத்தில் 90, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் 18 மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் 3 என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாகூரில் மட்டும் 50 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்கள் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது. இந்த ஆய்வின்மூலம் மதரஸா பள்ளிக்கூடங்களில் 12 சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதும் தெரியவந்தது.

கசூரின் சுனியன் வட்டாரத்தில் இருந்து காணாமல் போன நான்கு குழந்தைகளில் குறைந்தது மூன்று பேரின் உயிரிழந்த உடல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பேரும் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன நான்கு குழந்தைகளில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், மற்ற இருவரின் உயிரிழந்த உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் கசூர் போலீஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை இரவு அதே நகரத்திலிருந்து மற்றொரு குழந்தை கடத்தப்பட்டது''.

இவ்வாறு சாஹில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x