Published : 20 Sep 2019 01:27 PM
Last Updated : 20 Sep 2019 01:27 PM

விஷமப் பிரச்சாரங்கள் எல்லா நேரங்களிலும் உதவாது; பாகிஸ்தானுக்கு சையத் அக்பருதீன் எச்சரிக்கை

நியூயார்க்

தீங்கு விளைவிக்கும் விஷமப் பிரச்சாரங்கள் எல்லா நேரங்களிலும் உதவாது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையத் அக்பருதீன் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 74-வது ஆண்டு பொதுக் கூட்டம் மாதம் விரைவில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகின்றனர். செப்ட்மபர் 27-ல் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நிகழ்த்தப் போகும் உரையில் காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேசப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, பாகிஸ்தான் மீது மறைமுகத் தாக்குதலை முன்வைத்துள்ளார் சையத் அக்பருதீன்.

செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அக்பருதீன், "சிலர் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரச்சினையை ஏற்படுத்த விரும்புகின்றனர். இந்தப் பிரச்சினையை அவர்கள் இதற்கு முன்னரும் எழுப்பியுள்ளனர். சர்வதேச தளங்களை எப்படி அணுகுவது என்பதில் ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கும். சிலர் எந்த கீழ்நிலைக்கும் இறங்குவார்கள். அப்படி இறங்குபவர்களுக்கு முன்னாலும்கூட உயர்ந்து நிற்பதே எங்களின் (இந்தியாவின்) பதில்.

அவர்களின் பயங்கரவாதத்தை நாங்கள் பார்த்துவிட்டோம். இப்போது அவர்களின் முக்கியத்துவம் வெறுப்புப் பேச்சில் இருக்கிறது. அது அவர்களின் நிலைப்பாடு. வெறுப்பைத்தான் விதைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அதனை அவர்கள் செய்யலாம்.

ஆனால், தீங்கு விளைவிக்கும் விஷமப் பிரச்சாரங்கள் எல்லா நேரங்களிலும் உதவுவதில்லை" என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேசும்போது பதிலளிக்கும் உரிமை (Right to Reply) என்ற வாய்ப்பைப் பயன்படுத்துவீர்களா என்ற் கேள்விக்கு, ராஜாங்க ரீதியாக என்னென்ன உத்திகளைப் பயன்படுத்துவீர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்வது மோசமான உத்தி. நான் மோசமான உத்தியைக் கடைபிடிப்பவன் அல்ல" என்றார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x