Published : 19 Sep 2019 06:47 PM
Last Updated : 19 Sep 2019 06:47 PM

சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரம்; ஆதாரத்தைக் காட்டுங்கள்: ஈரான் காட்டம்

சவுதி எண்ணெய் ஆலை மீதான தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்றால் அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

சவுதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சுமார் 18 ஆளில்லா விமானங்கள், 7 ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் வடக்குப் பகுதியிலிருந்து நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரான்தான் ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது என சவுதி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

மேலும் எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்க விசாரணைக் குழுவும் தெரிவித்தது.
இந்நிலையில் தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்பதற்கான ஆதாரத்தைத் தாருங்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் கூறும்போது, “உண்மையில் சவுதி எண்ணெய் ஆலை தாக்குதலை ஈரான் நடத்தியதற்கான ஆதாரம் இருந்தால், அதை எங்களிடம் காட்டுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x