Published : 19 Sep 2019 06:07 PM
Last Updated : 19 Sep 2019 06:07 PM

90களுக்குப் பிறகு உலக அளவில் இந்தியப் பரப்பளவுக்கான வனப்பகுதி காலியாகிப் போனது: ஆய்வில் தகவல்

மெல்போர்ன்

1990களில் இருந்து, பூமிப்பந்தில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் சதுர கிலோமீட்டர் வனப்பகுதிகளை நாம் இழந்துள்ளோம். உலகின் சில பகுதிகள் மனித சந்தடி இல்லாத அல்லது குறைவாகவே உள்ளன. அத்தகைய பிராந்தியங்களைப் பாதுகாப்பதன் மூலம் பூமிக்கு ஏற்பட உள்ள அழிவு அபாயத்தை பாதியாகக் குறைக்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு.

வனப்பகுதிகள் அழிந்தது குறித்து ஓர் ஆய்வை நேச்சர் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களும் ஆய்வின் ஆசிரியர்களாக கலந்துகொண்டனர்.

ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்ட காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.ஓ) உருவாக்கப்பட்ட புதிய உலகளாவிய பல்லுயிர் மாடலிங் உள்கட்டமைப்பை இந்த ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள உயிரினங்களின் இழப்பு குறித்த மதிப்பீடுகளை அவர்கள் வழங்கியுள்ளனர்.

நேச்சர் இதழ் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

''உலகின் தற்போதைய பரப்பளவில் 20 சதவீதத்திற்கும் குறைவான பகுதிகளை மட்டுமே வனப்பகுதி என்று அழைக்க முடியும். இது மிகவும் ஆபத்தானது. அவற்றில் பல தேசியப் பூங்காக்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே காணப்படுகின்றன. 1990களில் இருந்து பூமியின் வனப்பகுதியில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிக்கப்பட்டுள்ளன. பூமியில் இந்தியாவின் அளவு இது.

வன உயிரினங்கள் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினால் ஏற்படும் நேரடி நன்மைகள் குறித்த புரிதல் முன்பெல்லாம் நாம் பெரும்பாலும் அறியப்படவில்லை. ஆனால் இப்போது அதற்கான எல்லா தகவல்களும் கிடைக்கின்றன.

இனியாவது சமீபத்திய மனிதத் தடம் செல்லும் வரைபடத்துடன் பல முக்கியமான வனப்பகுதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், உலகின் பல பகுதிகளில் நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களின் இழப்பை நாம் தடுக்க முடியும்.

வனங்கள் குறைந்து வருவதால் வனப்பகுதிகளுக்கு வெளியே காணப்படும் உயிரினத் தொகுதிகளைவிட இருமடங்கு உயிரினங்களின் இழப்பு அபாயம் ஏற்படுகின்றன. ஆனால் உயிரினங்களின் அழிவுக்கு எதிராகத்தான் வனப்பகுதிகள் தெளிவாகச் செயல்படுகின்றன.

வனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழலை வனப்பகுதிகள் தந்தன. பல்லுயிர் பெருக்கம் சிறக்க நல்ல வாழ்விடங்களைத் அளித்த விதத்தில் இன்னும் பெரிய பங்களிப்பை வனப்பகுதிகள் செய்தன. சீரழிந்த வாழ்விடங்களில்கூட வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான பல உயிரினங்களை ஆதரிக்கவும் இதுபோன்ற வனப்பகுதிகளால் மட்டுமே முடியும்.

உலகின் சில பிராந்தியங்களில் உள்ள வனப்பகுதிகளில் - ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்ன்ஹெம் நிலத்தின் பகுதிகள், தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள காடுகள் மற்றும் பொலிவியன் அமேசானில் உள்ள மாடிடி தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்றவை - அவற்றின் இழப்புகள் பல்லுயிரியலின் வாழ்வாதாரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது என்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகும். இனியாவது, பூமியின் மீதமுள்ள வனப்பகுதியைப் பாதுகாக்கவேண்டும்.

பழங்குடி சமூகங்களின் நீண்டகால உயிர்-கலாச்சார தொடர்புகளை உறுதி செய்வதற்கும், நீர் சுழற்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முக்கியமானவையாக விளங்கிய இந்த வனப்பகுதிகள், பருவநிலை நெருக்கடியைத் தணிப்பதற்காக மனிதனால் பெரும் அச்சுறுத்தலுக்கு தள்ளப்பட்டது.

வனப்பகுதிகளை ஒட்டி அல்லது வனப்பகுதிகளை அழித்து சுற்றுச்சூழல் வளையத்துக்குள் தொழில்துறை தொடங்குவது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்''.

இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x