Published : 18 Sep 2019 05:23 PM
Last Updated : 18 Sep 2019 05:23 PM
ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் அங்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள், “ ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் இன்று (புதன்கிழமை) தீவரவாதிகள் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். இதில் தற்போது கிடைத்த தகவல்படி 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குண்டுவெடிப்பை போலீஸார் மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, ஆப்கனில் நேற்று அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் பலியாகினர். மேலும் காபூலில் அமெரிக்கத் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர்.
ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்துவரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பேச்சுவார்த்தை அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் முடிவு தலிபான்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தலிபான்கள் ஆப்கனில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கன் அதிபர் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT