Published : 18 Sep 2019 12:31 PM
Last Updated : 18 Sep 2019 12:31 PM

ஈரான் அதிபரை சந்திக்கப்போவதில்லை: ட்ரம்ப்

சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதல் காரணமாக மோதல் வலுத்து வரும் நிலையில் ஈரான் அதிபரை சந்திக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த உற்பத்தி நிறுத்தம் இன்னும் பல வாரங்களுக்கு தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஏமன் தீவிரவாதிகள் என்றாலும் அதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்க வெளியிட்டது. இது அடிப்படை ஆதரமாற்ற குற்றச்சாட்டு என கூறி ஈரான் மறுத்தது. மேலும் அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடந்த வாய்பே இல்லை என்றும் ஈரான் தெரிவித்தது.

இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் சந்திக்க போவதில்லை என்று ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இது தொடர்பான செய்தி நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

சவுதி எண்ணெய் ஆலை விவகாரத்தில் ஈரான் பொய் கூறுகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x