Published : 17 Sep 2019 04:07 PM
Last Updated : 17 Sep 2019 04:07 PM

ஆப்கனில் அதிபர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணி அருகே குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அதிபர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணி அருகே குண்டு வெடித்ததில் 24 பேர் பலியாகினர் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில் இன்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அப்பகுதிக்கு அருகே திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 24 பேர் பலியாகினர். 31 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடக்கம். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளனர்

இந்த தாக்குதலை தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் நடத்தியதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி எந்த பாதிப்புமின்றி தப்பினார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்துவரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் முடிவு தலிபான்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தலிபான்கள் ஆப்கனில் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x