Published : 17 Sep 2019 01:03 PM
Last Updated : 17 Sep 2019 01:03 PM
டெஹ்ரான்
சவுதி கச்சா எண்ணெய் ஆலை தாக்குதல் விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த உற்பத்தி நிறுத்தம் இன்னும் பல வாரங்களுக்கு தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஏமன் தீவிரவாதிகள் என்றாலும் அதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்க வெளியிட்டது. இது அடிப்படை ஆதரமாற்ற குற்றச்சாட்டு என கூறி ஈரான் மறுத்தது. மேலும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என ஈரான் தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தநிலையில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறுகையில் ‘‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. சவுதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஆனால் நாங்கள் அதற்கு பலியாக மாட்டோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை. அவர்களுடன் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை இல்லை’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT