Published : 17 Sep 2019 12:51 PM
Last Updated : 17 Sep 2019 12:51 PM

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி மர்ம மரணம்: கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணமா?

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் மருத்துவக் கல்வி பயின்றுவந்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கு கட்டாய மதமாற்றத்துக்கான துன்புறுத்தல் காரணமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பாகிஸ்தானின் கோட்கி டவுன் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார் நம்ரிதா சந்தனி. இந்நிலையில் இவர் இன்று காலை (செவ்வாய் காலை) விடுதியில் உள்ள அவரது அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

போலீஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால், மாணவியின் உறவினர்கள் இது கொலை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். மாணவியின் சகோதரர் விஷால் சுந்தர் கூறும்போது, "இது நிச்சயமாக தற்கொலை இல்லை. தற்கொலை அடையாளங்கள் வேறு மாதிரி இருக்கும். எனது தங்கை வெள்ளை நிற துப்பட்டாவால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அவரின் கழுத்தில் மின் கேபிள் அச்சு இருக்கிறது. அவருடைய கைகளிலும் காயங்கள் இருக்கின்றன. அவருடன் இரண்டு நாட்களுக்கு முன்னதாகக் கூட பேசினேன். அவர் மிகவும் புத்திசாலி மாணவி. இந்த வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். பொதுமக்கள் எங்களுக்கு துணை நிற்க வேண்டும்" என்றார். விஷால் சுந்தர் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார்.

கோட்கி டவுன் பகுதியில் அண்மையில் இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட முதல்வர் ஒருவர் மதமாற்றம் செய்ய முற்பட்டதாகக் கைது செய்யப்பட்டார். கோட்கியில் இந்து கோயில் ஒன்றும் சூறையாடப்பட்டது.

இந்நிலையில், கட்டாய மத மாற்றத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் நம்ரிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இந்து சமூகத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிந்தி அமைப்பு, ஆண்டுதோறும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 12 முதல் 28 வயதிலான இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் கடத்தப்பட்டு இஸ்லாமியர்களுக்கு கட்டாயமாக திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிய்ட்டுள்ளது.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையமே கடந்த 2004 ஜனவரி முதல் 2018 மே மாதம் வரை 7430 சிந்தி இந்துப் பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறுகிறது.

பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்துவ, சீக்கிய சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

அண்மையில்கூட சீக்கிய மதத்தைச் சேர்ந்த பாகிஸ்தானின் முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார் தனது குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். சிறுபான்மையினருக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று அவர் கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் மரணம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x