Published : 16 Sep 2019 11:15 AM
Last Updated : 16 Sep 2019 11:15 AM

சவுதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் எதிரொலி: ஈரான் - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல்

சவுதி எண்ணெய் ஆலைகளில் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் காரணமாக வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கடநத் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி தீயை அணைத்தனர். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும் இந்த எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

இத்தாக்குதல் காரணமாக கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் அளவு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதியின் எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். மேலும் ஈரானை அவர் விமர்சித்திருக்கிறார்.

ஏமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சவுதி எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் ஈரான் இல்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் கூறும்போது, ”இந்த குற்றச்சாட்டு ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை நியாயப்படுத்தும். அவர்கள் ஈரானின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்கள் காரணமாக வளைகுடா பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

சவுதி - ஏமன் கிளர்ச்சியாளர்கள் மோதல்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறி வைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x