Published : 12 Sep 2019 06:08 PM
Last Updated : 12 Sep 2019 06:08 PM

பேச்சுவார்த்தை ரத்தான நிலையில் தலிபான்களுக்கு ட்ரம்ப் மிரட்டல்

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை ரத்தான நிலையில் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திராத தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் தலிபான்களுக்கு புதிய மிரட்டல் ஒன்றை விடுத்திருக்கிறார் ட்ரம்ப்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “தலிபான்கள் இதற்கு முன்னர் தாக்கப்பட்டதைவிட கடுமையாக தாக்கப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக நம் நாட்டிற்குள் நுழைந்தால்... அவர்கள் எங்கு சென்றாலும் இதற்கு முன்னர் அமெரிக்கா அவர்கள் மீது நிகழ்த்தியிராத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். நான் அணுசக்தி குறித்துக் கூறவில்லை. அவர்களுக்கு என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்” என்றார்.

பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் திரும்பப் பெற்றது முதல் ஆப்கனின் வடக்குப் பகுதியில் தலிபான்கள் தங்கள் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவுக்கு வருத்தப்படுவார் என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x