Published : 10 Sep 2019 01:23 PM
Last Updated : 10 Sep 2019 01:23 PM

இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதித்த வடகொரியா: தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியிருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரிய ராணுவம் தரப்பில், “வடகொரியா அதன் தென் பியோங்கன் மாகாணத்தில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. இந்தச் சோதனை கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து நடத்தும் ஏவுகணைச் சோதனைகளைக் கண்காணிப்போம் என்றும், தற்போது நடத்திய ஏவுகணைச் சோதனை குறித்த கூடுதல் விவரம் ஏதும் இல்லை என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

முன்னதாக, திங்கட்கிழமையன்று வடகொரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுய் கூறும்போது, “ வடகொரியாவின் புதிய கோரிக்கைகளை ஏற்றால் அமெரிக்காவின் அணு ஆயுதச் சோதனைகள் குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார். இதில் வடகொரியாவுக்குத் திருப்தி ஏற்படவில்லை என்றால் இரு நாடுகளுக்கு இடையேயான உடன்பாடு முடிவுக்கு வரும்” என்றார்.

அமெரிக்கா- வடகொரியா இடையே அணு ஆயுதச் சோதனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் வடகொரியா கடந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்தச் செயல் அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தையில் பெரும் எதிர்வினையை உண்டாக்கும்.

அமெரிக்கா - வடகொரியா மோதல்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணுஆயுதச் சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற சீனா முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து அணுஆயுதச் சோதனைகளை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x