Published : 10 Sep 2019 11:09 AM
Last Updated : 10 Sep 2019 11:09 AM

ஆப்கனில் ஐஎஸ் தீவிரவாதிகள் வலுப்பெற்று வருகின்றனர்: ஐ.நா.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வலுப்பெற்று வருவதாக ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்டோனியோ கட்டர்ஸ் கூறும்போது, ''ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் சர்வதேசப் படைகளின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர் நடவடிக்கை தாண்டியும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் எழுந்து வருகின்றனர்.

ஆப்கனில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு தன்னம்பிக்கையுடன் நாட்டை வழிநடத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. பேரழிவைத் தரக்கூடிய மோதலிலிருந்து நாட்டைப் பேச்சுவார்த்தை மூலம் காக்க வேண்டும்” என்றார்.

மேலும், ஆப்கனில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஐஎஸ் தீவிரவாதிகள் 193 தீவிரவாதத் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இந்தக் கால அளவில் ஏற்பட்ட தாக்குதல்கள் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம் என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடக்கின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புக்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் பாகிஸ்தான் வந்தடைந்தனர்.

இந்நிலையில் ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x