Published : 09 Sep 2019 05:41 PM
Last Updated : 09 Sep 2019 05:41 PM

டிரம்ப்பிடம் உதவி கோரும் ஹாங்காங் போராட்டக்காரர்கள் 

குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை திரும்பப் பெற்ற போதிலும் பிற நிபந்தனைகளை நிறைவேற்றக் கோரி ஹாங்காங் போராட்டக்காரர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் வலுயுறுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். தொடர் போராட்டம் காரணமாக ஹாங்காங்கில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஹாங்காங் தலைமைச் செயல் அதிகாரி கேரி லேம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு அடிபணிந்து சீனாவுக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று விசாரிக்கும் புதிய சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்படும் என்று கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார். எனினும் போராட்டக்காரர்கள் வைத்த பிற நிபந்தனைகளையும் நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஹாங்காங்கை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு கையில் அமெரிக்கக் கொடியுடன் பேரணி சென்றனர். மேலும், சீனாவிடமிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் ட்ரம்ப்பின் முன் வைத்தனர்.

அத்துடன் இன்று (திங்கட்கிழமை) பள்ளி மாணவர்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாலையில் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம் என்று சீனா கூறியுள்ளது. ஹாங்காங்கின் முடிவுகளுக்கு மதிப்பும், ஆதரவும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடர் போராட்டம் காரணமாக ஹாங்காங்கின் சுற்றுலா 40% பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x