Published : 07 Sep 2019 05:31 PM
Last Updated : 07 Sep 2019 05:31 PM
இந்தியக் குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வான்வழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டி இந்தியா அளித்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு இந்த வருடத்தில் நிகழ்ந்த தீவிரவாத நிகழ்வுகள் குறித்தும் தேசியப் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிப்பதற்காக திங்கட்கிழமை முதல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் ராம்நாத் கோவிந்தின் வான்வழிப் பயணத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மம்மூத் குரேஷி கூறும்போது, “இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கட்கிழமை முதல் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய எங்களது வான்வழிப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது. மேலும், செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT