Published : 05 Sep 2019 01:10 PM
Last Updated : 05 Sep 2019 01:10 PM
குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்யும் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யும் முடிவை வாபஸ் பெற்றதை சீனா ஆதரிப்பதாக ஹாங்காங் நிர்வாக இயக்குனர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். தொடர் போராட்டம் காரணமாக ஹாங்காங்கில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஹாங்காங் தலைமைச் செயல் அதிகாரி கேரி லேம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு அடிபணிந்து சீனாவுக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று விசாரிக்கும் புதிய சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்படும் என்று ஹாங்காங் அரசு புதன்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேரி லேமிடம், ''எதற்கு மசோதாவை ரத்து செய்ய இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்கப்பட்டது.
இதற்கு கேரி லேம், ''ஏன் நாம் இந்த மசோதாவை திரும்பப் பெறுகிறோம் என்பதை மத்திய அரசாங்கம் புரிந்து கொள்வதற்கான காலம்தான் இது. அவர்கள் நமது நிலைப்பாட்டை மதிக்கிறார்கள். இந்த முடிவை மதிக்கிறார்கள். அவர்கள் நமது அரசையும், என்னையும் ஆதரிக்கிறார்கள். இனி நமது சமூகத்தில் உள்ள அதிருப்திகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடித்து தீர்வுகளைத் தேட வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT