Published : 30 Aug 2019 05:24 PM
Last Updated : 30 Aug 2019 05:24 PM

தொடர் ஏவுகணை சோதனை எதிரொலி: வடகொரியா செல்லும் சீன பிரதிநிதி 

தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவதை தொடர்ந்து அந்நாட்டுக்கு சீனாவின் மூத்த பிரதிநிதி வாங் யி பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை சீன வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வடகொரியா இடையே அணுஆயுத சோதனைகள் தொடர்பாக பேச்சுவார்தைகள் நடத்தி வரும் நிலையில் வடகொரியா கடந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்தச் செயல் அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தையில் பெரும் எதிர்வினையை உண்டாக்கும்.

இந்த நிலையில் வடகொரியாவுக்கு சீனாவின் மூத்த பிரதி நிதி வாங் யி அடுத்த வாரம் பயணம் செய்ய இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தில் ஏவுகணை சோதனைகள் மற்றும் இரு நாட்டு உறவு குறித்து முக்கிய ஆலோசனைகள் நிகழும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தையை சீனா ஆதரித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு பயணம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x