Published : 25 Aug 2019 04:37 PM
Last Updated : 25 Aug 2019 04:37 PM

பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கிய பஹ்ரைன் அரசு: சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு 

பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் நாட்டின் உயரிய விருது வழங்கிய அந்நாட்டு அரசர் ஹமாத் பின் இசா பின் சல்மான்: படம் ஏஎன்ஐ

மனாமா,

பிரதமர் மோடி உடனான சந்திப்பையடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பஹ்ரைன் அரசு முடிவு செய்துள்ளளது.

மேலும், இந்தியா, பஹ்ரைன் இடையே வலுவான நட்புறவை மலரச் செய்தமைக்காக, பஹ்ரைன் நாட்டின் மிக உயரிய விருதான அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருது பிரமதர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார்.

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபாவைச் சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுநாள்வரை எந்த இந்தியப் பிரதமரும் பஹ்ரைன் நாட்டுக்குச் செல்லாத நிலையில் முதல்முறையாக பிரதமர் மோடி அங்கு சென்றதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவுக்கும், பஹ்ரைனுக்கும் இடையே வலுவான நட்புறவை மலரச் செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் நாட்டின் மிக உயரிய 'அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருது' வழங்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், " பஹ்ரைன் நாட்டின் அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருதை பணிவுடன் ஏற்கிறேன். இந்தியாவுடான வலிமையான நட்புறவுக்கு அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே ஸ்திரமான நட்புறவு ஏற்பட இந்த பயணம் உதவும். மூத்த தலைவர்களுடான ஆலோசனை, ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் ஆகியவை என்றென்றும் நினைவில் இருப்பவை. பஹ்ரைன் நாட்டு மக்களின், அரசின் கவனிப்பு மிகச்சிறப்பாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்

பஹ்ரைன் அரசருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், " பஹ்ரான் அரசர் ஹமாத் பின் இசா பின் சல்மானுடனான சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. மரியாதைக்குரிய அரசரும், நானும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை குறித்துப் பேசினோம். நம்முடைய இரு நாட்டு மக்களின் நலனுக்காக பரஸ்பர கூட்டுறவை மேம்படுத்த திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

மனாமா நகரில் உள்ள ஸ்ரீநாத்ஜி கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றார். புனரமைப்பு பணிகள் முடிந்துள்ள அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி, அங்கிருந்த இந்தியர்களிடம் உரையாடினார்.

இதற்கிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பின் எதிரொலியாக நல்லெண்ண நடவடிக்கையாக சிறையில் உள்ள இந்தியக் கைதிகள் 250 பேருக்கு மன்னிப்பு வழங்க பஹ்ரைன் அரசர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக ஆயிரத்து 811 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆயிரத்து 392 இந்தியர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், பஹ்ரைன் நாட்டு சிறையில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நல்ல எண்ண நடவடிக்கையாக 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x