Published : 24 Aug 2019 11:22 AM
Last Updated : 24 Aug 2019 11:22 AM

வடகொரியா ஏவுகணை சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை கடலில் செலுத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா ராணுவ தலைமை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணைகளை கிழக்குப் பகுதியில் செலுத்தியது. இது குறித்து எங்கள் ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.”என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மைக் பாம்பியோ அணுஆயுத சோதனைகளை வடகொரியா கைவிடும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

இதற்கு வடகொரியா தரப்பில்” பொருளாதாரத் தடையால் மாற்றம் ஏற்படும் என்று அமெரிக்கா நினைக்கும் கனவை வடகொரியா சிதைக்கும். பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தொடர்ந்தால் அந்நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக எதிர்காலத்திலும் வடகொரியா இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை மைக் பாம்பியோ அவர் எச்சரித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x