Published : 22 Aug 2019 11:44 AM
Last Updated : 22 Aug 2019 11:44 AM

மூன்று வாரங்களாக பற்றி எரியும் அமேசான் காடுகள்: அச்சத்தில் விஞ்ஞானிகள்

பிரேசிலின் அமேசான் காடுகள் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத் தீக்கு இரையாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி இருக்கிறார் என்று பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் முன்பில்லாத அளவிலான காட்டுத் தீயை அமேசானின் மழை காடுகள்எதிர்க் கொண்டுள்ளன .

இந்தக் காட்டுத் தீ குறித்து பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறும்போது, " பிரேசிலில் இந்த ஆண்டு மட்டும் 72,843 காட்டுத் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் அதிகமான தீ விபத்துகள் அமேசான் காட்டு பகுதியில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு சுமார் 9,000க்கும் அதிகமான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 80% அதிகமாகும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த பூமியின் நுரையிரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் உலகிற்கு தேவையான 20% ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துகள் பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமேசான் காடுகள் தீக்கிரைகியுள்ள புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் #SaveAmazon என்ற ஹாஷ்டேக்குடன் பரவலாக பகிரப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x