Published : 20 Aug 2019 02:30 PM
Last Updated : 20 Aug 2019 02:30 PM

கிளர்ச்சியாளர்கள் பகுதியை கைப்பற்றிய சிரிய அரசு

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முக்கியப் பகுதியை அரசுப் படைகள் கைப்பற்றின.

இதுகுறித்து சிரிய போர் கண்காணிப்புக் குழு கூறுகையில், “ சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அரசுப் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இந்நிலையில் இட்லிப் மாகணத்தின் வடக்கு மேற்கு பகுதியை அதிபர் ஆசாத் ஆதரவுப் படைகள் கைப்பற்றியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஷான் ஷெகுன் பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறினர்” என்று தெரிவித்தது.

கிளர்ச்சியாளர்களுடனான போர் நிறுத்தத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் அங்கு போர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதலைத் தொடர்ந்தன. இந்தச் சண்டை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அச்சத்தில் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது. எனினும் தொடர்ந்து அரசுப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத் அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x