Published : 17 Aug 2019 04:54 PM
Last Updated : 17 Aug 2019 04:54 PM
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் கலந்துகொண்டன. இதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறும்போது, ''50 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முதல் முறையாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இதனை நான் வரவேற்கிறேன். காஷ்மீர் தொடர்பான பிரச்சினையை நீக்குவது இந்த அமைப்பின் பொறுப்பு என அவர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பின் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்கு இந்தியா அளித்துள்ள சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது. சீனாவும் இதற்கு ஆதரவு தெரிவித்தத்தைத் தொடர்ந்து காஷ்மீர் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT