Published : 16 Aug 2019 05:30 PM
Last Updated : 16 Aug 2019 05:30 PM
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கவுட்டா நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவுட்டா நகரில் குச்லக் பகுதியில் உள்ள மசூதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குண்டு வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குத்லுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கவுட்டா நகரில் கடந்த 4 வாரத்தில் மட்டும் 4-வது முறையாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.
பலுசிஸ்தானில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT