Published : 15 Aug 2019 05:08 PM
Last Updated : 15 Aug 2019 05:08 PM

சீனா எனது நாடு: ஹாங்காங் போராட்டக்காரர்களை விமர்சித்த ஜாக்கிசான்

ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், ''சீனா எனது நாடு. நான் எனது நாட்டை நேசிக்கிறேன்'' என்று பிரபல நடிகர் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஹாங்காங் நிர்வாகத்துக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சீனாவின் கொடிகளைத் தாக்கியும் தங்கள் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் சீனாவிற்கு ஆதரவாகவும், போராட்டக்காரர்களுக்கு எதிராகவும் ஹாங்காங்கை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்கிசான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு ஜாக்கிசான் பேசும் போது, ''சீனக் கொடியின் காவலனாகவும், ஹாங்காங் சமூகத்தின் உறுப்பினராகவும் நான் எனது அடிப்படை தேச உணர்வை வெளிப்படுத்துகிறேன்.

நான் பல நாடுகளுக்குப் பயணித்திருகிறேன். இதில் நமது நாடு சமீப ஆண்டுகளில் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. நான் சீனாவைச் சேர்ந்தவன் என்ற பெருமையை எங்கும் உணர்கிறேன். ஹாங்காங் நான் பிறந்த இடம். எனது சொந்த நகரம். ஆனால் சீனா எனது நாடு. நான் எனது நாட்டை நேசிக்கிறேன்.

பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, அமைதி ஆகியவை புதிய சுவாசம் போன்றவை. அதனை நீங்கள் இழக்கும்வரை அதன் அருமை உங்களுக்குப் புரியாது. ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக் கூறியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் சீனாவில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x