Published : 13 Aug 2019 01:06 PM
Last Updated : 13 Aug 2019 01:06 PM

பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மையை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது: ஈரான் குற்றச்சாட்டு

தங்கள் பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கிறது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை அளித்து வரும் நிலையில் அதன் பிராந்தியத்தில் தனது படையை அதிகரித்து வருவதால் வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹோர்மஸ் நீரிணைப்புப் பகுதியில் ஈரானின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு சர்வதேச கடற்படைக் கூட்டணிக்கு ட்ரம்ப் நிர்வாகம் நட்பு நாடுகளை நாடியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறும் நிலையில் அமெரிக்கா இல்லை. இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மை நிலவுவதற்கு அமெரிக்கா காரணமாக உள்ளது. நாங்கள் வேண்டுவது எங்கள் பிராந்தியத்தில் அமைதியான நிலைமை. எங்கள் பிராந்தியத்தில் வசிக்கும் அனைவருக்கும் அமைதியான நிலை.

நான் ஒன்றைத் தெளிவாகக் கூறுகிறேன். நாங்கள் யாருடனும் போரை விரும்பவில்லை. நாங்கள் யாருடனும் மோதலை விரும்பவில்லை. நாங்கள் வேண்டுவது எங்கள் மக்களுக்கான முன்னேற்றம். எங்கள் பிராந்தியத்துக்கான முன்னேற்றம். நீங்கள், இந்தப் பிராந்தியத்திற்கு வரும் அச்சுறுத்தல் குறித்துப் பேசுகிறீர்கள் என்றால், அந்த அச்சுறுத்தல்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால்தான் வருகின்றது” என்று ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வதையும் சாரிஃப் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x