Published : 12 Aug 2019 11:33 AM
Last Updated : 12 Aug 2019 11:33 AM

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கடுமையான தாக்குதல்

ஹாங்காங்கில் நடந்த பேரணியில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் அங்கு நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் அமைதிப் பேரணி சென்றனர். இதில் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைக் கலைக்க முயன்றனர்.

மேலும், வான் சை போன்ற மாவட்டங்களில் நடந்த பேரணியில் போலீஸார் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தினர். போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலையும் போலீஸார் நடத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மேலும் ,போராட்டக்காரர்கள் போல் வேடமணிந்த போலீஸார், அவர்களைக் கைது செய்ததாக ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலையடுத்து, ஹாங்காங் அரசை பல்வேறு மனித நல உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார். எனினும் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு தொடர்ந்து ஹாங்காங்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x