Published : 05 Aug 2019 12:29 PM
Last Updated : 05 Aug 2019 12:29 PM

எகிப்தில் கார் மோதி வெடித்து பெரும் விபத்து: 19 பேர் பலி

எகிப்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் கார் ஒன்று மோதி வெடித்ததில் மற்ற கார்களுக்கும் தீ பரவியது. இதனால் 19 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து எகிப்து உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமை கூறும்போது, “ எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேசிய புற்று நோய் ஆய்வகத்தின் வெளியே வேகமாக வந்த கார் ஒன்று அங்கு நின்றிருந்த மற்ற கார்களுடன் மோதியது.

இதில் மோதிய கார் வெடித்துச் சிதறியதில் வேகமாகப் பரவிய தீ மற்ற கார்களையும் பற்றியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியிலும் என மொத்தம் 19 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது. 

இந்த விபத்தை நேரில் பார்த்த ரஹ்மான் முகமத் கூறும்போது, ”நாங்கள் வெடி சத்தத்தைக் கேட்டோம். கதவுகள் அதிர்ந்தன. வெளியே வந்து பார்த்தபோது கார்களில் தீ பற்றிக் கொண்டிருந்தது. அதனை அணைக்கும் முயற்சியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்” என்றார்.

19 உயிர்களைப் பலி வாங்கிய இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றும், கார் மோதியதால் வெடித்து விபத்து ஏற்பட்டதால், இது தீவிரவாத தாக்குதலா?  என்று விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

எகிப்தின் கிளர்ச்சியாளர்களுக்கும் எகிப்து அரசுக்கும் இடையே மோதல் வலுத்து வருவதால் கிளர்ச்சியாளர்கள் எகிப்தின் பல்வேறு இடங்களில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x