

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கியத் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை 26/11 தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் அவா தீவிரவாத அமைப்பும், அவரது தொண்டு நிறுவனமான பலாஹ் இ இன்சோனியத்தும் ஐநா உத்தரவுப்படி தடை செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பு என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருக்கின்றன. இதன் அடிப்படையில்தான் ஹபீஸ் சயீத்தின் இவ்வமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசால் ஹபீஸ் சயீத் கடந்த வாரம் திடீரென கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஹபீஸ் சயீத்துக்கு எதிரான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹபீஸ் சயீத்தின் காவலை அந்நாட்டு தீவிரவாதத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. இந்நிலையில் ஹபீஸ் சயீத்தின் கைது நாடகம் என்று இந்தியா விமர்சித்திருக்கிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறும்போது, " ஹபீஸ் சயீத் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. இந்த மாதிரியான நாடகம் 2001 ஆம் ஆண்டு முதல் 8 முறை நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளர்.