Published : 23 Jul 2019 10:03 AM
Last Updated : 23 Jul 2019 10:03 AM

ட்ரம்ப் பேச்சு முதிர்ச்சியற்றது: இந்தியத் தூதரிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் 

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்யக்கோரியதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்தால் எழுந்த சர்ச்சையில், இந்திய தூதரிடம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர் பிராட் ஷெர்மேன் மன்னிப்பு கோரினார்.

இது தொடர்பாக பிராட் ஷெர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை பற்றி  தெரிந்த எவருக்குமே இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நபர் தலையீட்டை தவிர்த்து வருகிறது என்பது நன்றாகவேத் தெரியும். அதேபோல் இந்தியப் பிரதமர் மோடியும் அத்தகைய கோரிக்கையை முன்வைத்திருக்கமாட்டார் என்பதும் தெரியும். அதிபர் ட்ரம்பின் கருத்து முதிர்ச்சியற்றது. திரித்துக்கூறப்பட்டது. இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் ஸ்ரிங்லாவை தற்போதுதான் சந்தித்து மன்னிப்பு கோரினேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் பேசியது என்ன?
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், "இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், நீங்கள் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறார்களா? எனக் கேட்டார். நான் எங்கு என்றேன். அவர் அதற்கு காஷ்மீர் என்றார். என்னால் முடியுமென்றால் நான் நிச்சயமாக மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றேன். நான் ஏதாவது விதத்தில் உதவியாக இருக்க இயலுமென்றால் என்னிடம் தெரிவியுங்கள் எனக் கூறினேன்" என்று தெரிவித்திருந்தார்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காஷ்மீர் விவகாரத்தில்  மத்தியஸ்தம் செய்யக் கூறுமாறு பிரமதர் மோடி கேட்டுக்கொண்டதாக அதிபர் ட்ரம்ப் கூறியதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ப்ராட் ஷெர்மேன், அதிபர் ட்ரம்பின் கருத்து முதிர்ச்சியற்றது. அதற்காக மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x