Published : 16 Jul 2019 12:54 PM
Last Updated : 16 Jul 2019 12:54 PM
ஹாங்காங்கில் போலீஸாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரர்களை கலகக்காரர்கள் என்று அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் விமர்சித்துள்ளார்.
ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று போலீஸாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் மால்களுக்குள் ஓடிச் சென்று போலீஸாரை தாக்கினர். பதிலுக்கு போலீஸார் தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பெப்பர் ஸ்ப்ரே ஆகியவற்றை போலீஸார் பயன்படுத்தினர். இதில் போராட்டக்காரர்கள் போலீஸார் என இரு தரப்பில் காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வன்முறையில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரிகளை திங்கட்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தார் கேரி.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் கேரி லேம் கூறும்போது, “போலீஸார் தங்கள் வேலையை முழுமையான அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இந்தப் போராட்டக்காரர்களை கலகக்காரர்கள் என்றே நினைக்கிறேண்” என்றார்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது ஹாங்காங். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.
ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங்கின் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த மாதம் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார்.
எனினும் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு ஹாங்காங்கில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT