Published : 15 Jul 2019 05:33 PM
Last Updated : 15 Jul 2019 05:33 PM
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினையைத் தீர்க்க இம்ரான் கான் ட்ரம்ப்பின் உதவியைக் கோர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் தரப்பில், " பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு இம்மாதம் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் நிச்சயம் உதவி கோருவார். அதுமட்டுமல்லாது பிராந்தியத்தில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட தலிபான்களுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இது தொடர்பாக ஆதரவு அளிக்கவும், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட உதவுவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பது குறித்து ட்ரம்ப்பிடம் இம்ரான் கான் கலந்தாலோசிக்க இருக்கிறார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த ஆண்டு பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற பிறகு அரசியல் ரீதியாக அவர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT