

ஆஸ்திரேலியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியது. இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோ மீட்டர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என்றும் டெர்மி போன்ற நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தை நேரில் உணர்ந்த டெர்மி நகரவாசி ஜோடி கவுண்ட் கூறும்போது, “ நாங்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தோம். எங்களுடைய நாற்காலிகள் ஆடத் தொடங்கின. இது உண்மையா? பொய்யா? என்று எனக்கு தற்போதுவரை தெரியவில்லை. இதுபோன்ற நிலநடுக்கத்தை நாங்கள் உணர்ந்ததே இல்லை” என்றார்.
ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் ரிக்டர் அளவு 6.6 ஆகவும் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.