

தாய்லாந்தில் அவசர நிலையை ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் ஆட்சி, அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்கு மாறியுள்ளது.
“நாட்டின் அமைதி, பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது ராணுவப் புரட்சி அல்ல” என்று தாய்லாந்து ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிரயூத் சான்-ஒச்சா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி, ரேடியா நிலை யங்கள் ராணுவ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய சோதனைச் சாவடிகள், சாலைகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர நாடு முழுவதும் கவச வாகனங்களில் ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தாய்லாந்து ராணுவ நடவடிக் கைக்கு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஜனநாயகரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க வேண்டும், அதற்கு ராணுவ ஆட்சி தீர்வாகாது என்று அந்த நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவியைப் பறித்து அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தகத் துறை அமைச்சர் நிவாட்டம்ராங் பூன்சாங் பய்சான் நியமிக்கப்பட்டார். வலுவான தலைமை இல்லாததால் உள்நாட்டு குழப்பம் மேலும் அதிகரித்தது.
இதனிடையே அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசு தலைமையில் பொதுத் தேர்தல் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கின. அதற்குப் போட்டியாக ஆளும் கட்சி தரப்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இருதரப்பினரும் தலைநகர் பாங்காக்கை முற்றுகையிட்டதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று ராணுவ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 1932-ல் தாய்லாந்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அங்கு 11 முறை ராணுவ புரட்சி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.