

தொண்டு நிறுவன நிதி மோசடி தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தியிடம் அந்த நாட்டு போலீஸார் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இலங்கையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். இத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராகப் பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த பல்வேறு ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்ச மீது தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவரது மனைவி ஷிராந்தி நடத்திய தொண்டு நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நிதி குற்றவியல் சிறப்பு போலீஸார் முன்பு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன்படி கொழும்பில் உள்ள சிறப்புப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார். அவருடன் ராஜபக்சவும் வந்தார். அங்கு ஷிராந்தியிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.