Published : 30 Jun 2015 10:20 AM
Last Updated : 30 Jun 2015 10:20 AM

இலங்கை தேர்தலில் மும்முனை போட்டி: சிறிசேனா, ராஜபக்ச, ரணில் அணிகள் பலப்பரீட்சை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது ராஜபக்ச அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனா எதிர்க்கட்சிகளுடன் இணைந்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஆனால் அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட சிறிசேனா அமோக வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றார். இதன்பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜபக்ச விலகினார். அதிபர் சிறிசேனா தற்போது கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் பின்னணியில் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க ராஜபக்ச விரும்புகிறார். ஆனால் அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோர் அதனை நிராகரித்துவிட்டனர்.

கடந்தமுறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டணி ஆட்சி நடத்தியது. இந்த கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ளன. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்தத் தகவலை ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த தலைவர் குமார் வெலகாம உறுதி செய்துள்ளார். அவர் கூறியபோது, ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிளவு ஏற்பட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஒரு அணியும் ராஜபக்ச தலைமையில் மற்றொரு அணியும் பொதுத்தேர்தலை சந்திக்கும் என்று தெரிகிறது.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் வேட்பாளராக போட்டி யிடுகிறார். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x