

ஜப்பானில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முயற்சிக்கும் அரசுக்கு, மக்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 67-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராணுவத்தின் அதிகாரத்தையும், பங்களிப்பையும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் ஷின்சோ அபே கூறி வரும் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாமல் பிரதமர் திணறி வருகிறார். இதையடுத்து மக்களிடம் கருத்துக் கேட்டு, அரசியமைப்புச் சட்டத்தை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கு பதிலாக, அதன் சில பகுதிகளில் மாற்றங்களைச் செய்வது என்று அரசு முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பொதுமக்களின் ஒரு பிரிவினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தை வலுவற்றதாக்கவும், ஜனநாயக முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அரசின் இந்த செயல்பாடு அமையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசை கண்டித்து நூற்றுக்கணக்கானோர், டோக்கியோ நகரில் சனிக்கிழமை பேரணி நடத்தினர்.