

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு வகைப்பாடு, தொடர்ந்து நடைபெறும் போர், இழப்புக்கான காரணங்களை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரின் செலவு, ஏற்கெனவே சுமார் 29 பில்லியன் டாலராக உயர்ந்துவிட்டதாகவும் இந்தச் செலவு அதிகரிப்பில் பெரும் பகுதி, ராணுவ உபகரணங்களை சீரமைக்க அல்லது மாற்றுவதற்கான செலவாகும் என்று பென்டகன் தெரிவித்தது.
இழந்த அல்லது சேதம் அடைந்த விமானங்கள் பட்டியலில், நான்கு எப்-15 இ ஈகிள் போர் விமானங்கள், ஒரு எப்-35 லைட்னிங்-2 போர் விமானம், ஒரு ஏ-10 தண்டர்போல்ட்-2 தரைத்தாக்குதல் விமானம், ஏழு கேசி-135 ஸ்ராடோடேங்கர் வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 24 எம்கியூ-ஏ ரீப்பர் டிரோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
போர் இழப்புகள் குறித்த விரிவான மதிப்பீட்டை அமெரிக்க பாதுகாப்புத் துறை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் அதன் குழுக்களுக்கு கொள்கை மற்றும் சட்ட ரீதியான பகுப்பாய்வுகளை வழங்கும் சிஆர்எஸ் அமைப்பானது, செய்திகள் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளை ஆய்வு செய்து இந்த இழப்பு விவரத்தை தொகுத்துள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை தொடங்கின. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.