Published : 14 May 2014 10:41 AM
Last Updated : 14 May 2014 10:41 AM

துருக்கி நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 201 பேர் பலி

மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 360 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சுமார் 80 சுரங்கத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களில் 4 பேர் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்தான்புல் நகருக்குத் தெற்கே 250 கிமீ தொலைவில் உள்ள சோமாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த விபத்து துருக்கி சுரங்க விபத்து வரலாற்றில் மிக மோசமான விபத்து என்று கூறப்படுகிறது.

சுரங்கத் தொழிலாளர்கள் ஷிப்ட் மாற்றும்போது இந்த விபத்து ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

கார்பன் மோனாக்சைடு கசிவினால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக இல்டிஸ் தெரிவித்தார். மின்வினியோக யூனிட் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயினால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது.

1992ஆம் ஆண்டு ஏற்பட்ட இதே போன்ற விபத்தில் 263 பேர் பலியானதற்குப் பிறகு துருக்கி வரலாற்றில் மிக மோசமான சுரங்க விபத்து இது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x