

இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ் எம்.பி. நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டது தொடர் பாக கடற்படையைச் சேர்ந்த 3 பேரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மை தமிழர்களுக்கு அதிக சுயாட்சி வழங்க ரவிராஜ் வலியுறுத்தி வந்தார். தமிழர் தரப்பு நியாயங் களை அவர் சிங்கள மொழியிலும் விளக்கக் கூடியவர் ஆவார்.
இந்நிலையில் 2006-ல் இலங்கை உள்நாட்டுப் போரின்போது, ரவிராஜ் அவரது காரில் சுட்டுக்கொல்லப் பட்டார். இவரை விடுதலைப்புலிகள் கொலை செய்ததாக முன்னாள் அதிபர் ராஜபக்ச கூறினார். ஆனால் இது இலங்கை அரசின் சதி வேலை என்று ரவிராஜின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
அரசு எதிர்ப்பாளர்களை கடத்திச் செல்வது மற்றும் கொலை செய்வது போன்ற அட்டூழியங்களில் ராஜபக்ச அரசு ஈடுபட்டதாக குற்றச் சாட்டுகள் உள்ளன.
இலங்கையில் சிறிசேனா புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை போலீஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா நேற்று கூறும்போது, “நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக கடற்படையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.