Published : 30 Apr 2015 08:31 AM
Last Updated : 30 Apr 2015 08:31 AM

கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய விண்கலம்: பூமியில் மோதும் அபாயம்

சர்வதேச விண்வெளி நிலையத் துக்கு உபகரணங்களை ஏற்றிச் சென்ற ஆளில்லா ரஷ்ய விண்கலம் ‘பிராக்ரஸ் எம்-27எம்’ தனது கட்டுப்பாட்டை இழந்து திரும்பிப் பாய்வதால் பூமி மீது மோதும் அபாயம் உள்ளது.

‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலம் சோயுஸ் ஏவுகணை மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை ஏவப்பட்டது. விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) ‘பிராக்ரஸ் எம்-27எம்’ கலத்தின் மூலம் 880 கிலோ உந்துகருவி (புரொபெல்லன்ட்), 50 கிலோ ஆக்சிஜன், 420 கிலோ குடிநீர், 1,418 கிலோ உதிரி பாகங்கள், அறிவியல் பரிசோதனை வன்பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு இன்று சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அங்குள்ள 6 விண்வெளி வீரர்கள் ‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலத்துக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால், சோயுஸ் ஏவுகணை மூலம் அனுப்பப்பட்ட பிறகு, அதனுட னான தொடர்பு விரைவிலேயே அறுந்துவிட்டது. தற்போது கட்டுப் பாட்டை இழந்துள்ள ‘பிராக்ரஸ் எம்-27எம்’ வேகமாக திரும்பிப் பாய்கிறது. அது பூமியில் விழுவதற்கே அதிக வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ரஷ்ய விண்வெளி ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறும் போது, “அது திரும்ப வந்து கொண்டிருக் கிறது. அது வேறெங் கும் செல்வதற்கு வாய்ப் பில்லை. நிலைமை கட்டுப்பாட்டைமீறிச் செல்வது தெளிவாகி விட்டது. இருப்பினும், அந்தக் கலத்தை பத்திர மாக மீட்பதற்கான முயற் சிகளை தொடர்ந்து வருகிறோம். அது எப்போது பூமியில் விழும் என்பதை கணிப்பது கடினம்” என்றார்.

‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலத் தைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துவிட்டதால், பத்திரமாக மீட்பது இயலாத காரியம். நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதை இழப்பது உறுதி என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலத்துக்கு ஏற்பட்ட கதி, ரஷ்ய விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு பெரும் பின்னடை வாக கருதப்படுகிறது.

விண்வெளி திட்டங்களில் பிரசித்தி பெற்ற ரஷ்யா, முதன்முதலாக 1957-ல் ஸ்புட்னிக் என்ற விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்தது. பின்னர் 1961-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை முதன் முதலாக அனுப்பி சாதனை படைத்தது. ஆனால், தற்போது பல்வேறு தோல்வி களால் ரஷ்ய விண்வெளி துறை பின்னட வைச் சந்தித்துள்ளது.

நாசா தகவல்

இதனிடையே ‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தைச் சென்ற டையாததால், அங்குள்ள அமெரிக்க விண்வெளி வீரர் களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை. அவர்களுக்குத் தேவை யான அனைத்தும் பல மாதங்களுக்கு இருப்பு உள்ளது என நாசா தெரிவித் துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு, வரும் ஜூன் 19-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் அடுத்த கட்ட சரக்குகள் கொண்டு செல்லப்பட உள்ளன.

பூமியில் விழுந்த ‘ஸ்கைலாப்’

மனிதனால் உருவாக்கப்பட்ட சிறிதும் பெரிதுமான சுமார் 8,000 பொருட்கள் விண்ணில் சுற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்றிரண்டு பொருட்கள் அவ்வப்போது பூமியில் விழுந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கு முன்பாக நாசா அனுப்பிய ஸ்கைலாப் விண்கலம் 1979-ம் ஆண்டு தனது சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி விழுந்தது. 77.5 டன் எடை கொண்ட ஸ்கைலாப் 1979ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள எஸ்பரன்ஸ் நகரில் துண்டு துண்டாக வெடித்துச் சிதறி கீழே விழுந்தது.

இது குடியிருப்புகள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது. ஆனால், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை.

ஆஸ்திரேலியாவில் விழுந்ததற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கோரினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x