

நாய் கடித்தால் இழப்பீடு கோரி வழக்கு போடுவது அமெரிக்காவில் சாதாரணம். ஆனால், அன்டோன் புரிசிமா என்ற 62 வயதுக்காரர் கேட்டுள்ள இழப்பீடு ரொம்பவே அதிகம்.
அப்படி அவர் எவ்வளவு தொகைதான் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா. அதிகமில்லை வெறும் 2 டெசில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டும்தான்.
ஒரு டெசில்லியன் என்பது ஒன்று என்ற எண்ணுக்குப் பிறகு 36 பூஜ்ஜியங்கள் போட்டால் எவ்வளவோ அவ்வளவு மதிப்பு கொண்டது.
ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு, இன்றைய தேதிக்கு ரூ.58.56 என்றால், அவர் கேட்ட இழப்பீட்டின் மதிப்பை கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில், நாய் உரிமையாளர் உள்பட பல்வேறு தரப்பினர் மீதும் வழக்கு தொடர்ந்து, மேற்கண்ட தொகையை இழப்பீடாகக் கோரியிருக்கிறார்.
இவ்வழக்கில் தனது தரப்பில் அவரே ஆஜராகி வாதாடுகிறார். மொத்தம் 22 பக்கம் எழுதப்பட்ட வழக்கு மனுவில் குடிமக்களின் உரிமை மீறப்படுவது முதல் கொலை முயற்சிவரை பல்வேறு பிரிவுகளில் இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.
தான் அனுபவித்த வலி, சேதம், பாதிக்கப்பட்டது ஆகியவற்றை பணத்தின் அளவு கொண்டு மதிப்பிட முடியாது. ஆகவே, விலைமதிக்க முடியாதது என்பதால் இவ்வளவு தொகையை இழப்பீடாகக் கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் விரலில் நாய் கடித்ததால் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.