Last Updated : 14 Apr, 2015 04:30 PM

 

Published : 14 Apr 2015 04:30 PM
Last Updated : 14 Apr 2015 04:30 PM

அமெரிக்கா பற்றி எரியும் நேரம் வந்துவிட்டது: ஐ.எஸ். மிரட்டல்

அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டடங்கள் தகர்க்கப்பட்டது போல மீண்டும் ஒரு முறை அமெரிக்கா பற்றி எரியும் என்ற மிரட்டலை வீடியோ வடிவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

'அமெரிக்காவை எரிப்போம்' என்ற தலைப்பிடப்பட்ட சுமார் 11 நிமிடங்கள் கொண்ட வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அரபு மொழியில் உள்ள அந்த வீடியோவுக்கு ஆங்கில மொழிப் பெயர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதில், "புவியியல் ரீதியாக மிகவும் பாதுகாப்போடு இருப்பதாக அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே அமெரிக்கர்களின் கனவுதான். வெறும் பிம்பமாக இருக்கும் இதுவும் வெகு சீக்கிரம் மறையும். இன்று உலகில் எங்கும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

அதிக வளங்கள் இல்லாத முஜாகுதீன்கள் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்குதல் நடத்தி தகர்த்தனர். அந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு மரண அடியாக இருந்தது. அதேபோல மற்றொரு முறை அமெரிக்கா எரியக் கூடியத் தருணம் வந்துவிட்டது.

தற்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பதற்காக பல பில்லியன்களை செலவழித்து வருகிறது. ஆனால் இவை அனைத்துக்கும் விலை கொடுக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது" என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டக் காட்சிகள், அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் ஆகிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

சிரியா, இராக்கில் பல நகரங்களை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், இதுவரை பலரை படுகொலை செய்து அதன் வீடியோவை வெளியிட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

அந்த இயக்கத்தை அழிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதற்கு எதிராக செயல்படுகின்றன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x