Last Updated : 25 Apr, 2015 06:11 PM

 

Published : 25 Apr 2015 06:11 PM
Last Updated : 25 Apr 2015 06:11 PM

நேபாள பூகம்பம்: எவரெஸ்ட் அடிவார முகாமில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலைப்பகுதி மற்றும் அடிவார முகாமில் பெருமளவு பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இறந்தவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நேபாள சுற்றுலா அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். காத்மாண்டுவில் இது தொடர்பாக கியானேந்திர ஷ்ரெஸ்தா என்ற அதிகாரி கூறும்போது, "பனிச்சரிவில் சிக்கி இறந்தவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பனிச்சரிவில் சிக்கிய அனைவரும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு வழிகாட்டிகள்" என்றார்.

முன்னதாக ருமேனியா நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் அலெக்ஸ் கவான் தனது ட்விட்டர் பக்கத்தில் "எவரெஸ்ட் மலையில் பெருமளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையில் மேல் பகுதியில் ஏராளமானோர் இருந்தனர். நான் எனது முகாமில் இருந்து தப்பியோடி உயிரை காப்பாற்றிக் கொண்டேன்" என்று கூறியிருந்தார்.

மற்றொரு மலையேற்ற வீரர் டேனியல் மசூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எவரெஸ்ட் அடிவார முகாமில் கடும் நிலநடுக்கமும் இதைத் தொடர்ந்து பெருமளவில் பனிச்சரிவும் ஏற்பட்டுள்ளது. எவரெஸ்ட் அடிவார முகாம் கடும் சேதம் அடைந்துள்ளது. எங்கள் குழுவினர் இங்கு சிக்கிக்கொண்டுள்ளோம். தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு சற்று மேலே பனிச்சரிவு ஏற்பட்டதில் நேபாளத்தைச் சேர்ந்த 16 வழிகாட்டிகள் இறந்தனர். மே மாத இறுதியில் எவரெஸ்ட் பகுதியில் மழைப் பொழிவு மற்றும் மேகமூட்டம் இருக்கும் என்பதால் மலையேற்றத்துக்கு சிறந்த சீசன்களில் ஒன்றாக ஏப்ரல் மாதம் கருதப்படுகிறது. இதனால் மலையேற்ற வீரர்கள் தற்போது அங்கு அதிக எண்ணிக்கையில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.- ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x