

குழந்தைகளைக் கடத்தி பில்லி சூனியம் செய்பவர் எனக் கருதி ஒரு பெண்ணை அடையாளம் தெரியாத கும்பல் அடித்துக் கொலை செய்தது. பேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றமிழைப்பவர் என வெளியிடப்பட்ட படத்தில் இருந்த அடையாளங்களுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் ஒத்துப் போனதால் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
சாவோ பாவ்லோ அருகேயுள்ள குவாருஜா நகரத்தில், பேபியன் மரியா டி ஜீசஸ் (33) வசித்து வந்தார். இவரை கடந்த 3-ம் தேதி ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியதில் அவர் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அப்பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றன. பேபியனுக்கும் அச்சம்பவங் களுக்கும் தொடர்பிருக்கும், பேபியன் ஒரு சூனியக்காரி எனச் சந்தேகித்த கும்பல் அவரைத் தாக்கியிருக்கலாம் என, ராணுவ போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், பேபியனுக்கும் அது போன்ற குற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த பேஸ்புக் கணக்கில், குற்றவாளியாகக் கருதப்படும் பெண்ணின் படம் வெளியிடப்பட்டது. அப்படம், பேபியனைப் போல இருந்ததால் இச்சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், நடந்த தவறுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என அந்த பேஸ்புக் கணக்கின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.