Last Updated : 05 Apr, 2015 12:37 PM

 

Published : 05 Apr 2015 12:37 PM
Last Updated : 05 Apr 2015 12:37 PM

சீறும் சீனா - 3

சீனாவில் வடகிழக்கிலிருந்த மஞ்சூக்கள் சீனாவை ஆக்கிரமிக்க முற்பட்டார்கள். இதை அறிந்ததும் மிங் வம்ச சக்ரவர்த்தி தனது திறமையான தளபதி ஒருவரின் தலைமையில் ஒரு பெரும் படையை வடக்கு நோக்கி அனுப்பினார். அந்தத் தளபதியின் பெயர் வூ சான் குயீ.

இந்த சமயத்தில் லீ சூ செங் என்பவர் தன் கொள்ளைக் கூட்டத்துடன் பெய்ஜிங்கில் நுழைந்தார். சீன ராணுவத்தில் பணியாற்றியவர். உள்நாட்டுக் கலகம் ஒன்றில் தனது ஒரு கண்ணை இழுந்தவர். சீனாவை ஆள வேண்டும் என்ற தாங்க முடியாத ஆர்வம் கொண்டவர்.

(இனி அந்தத் தளபதியை வூ என்றும் கொள்ளைக் கூட்டத் தலைவனை லீ என்றும் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்)

வூ மஞ்சூரியாவை நோக்கிச் செல்ல, இதுவே சரியான சமயம் என்று பெய்ஜிங் நகருக்குள் நுழைந்தார் லீ. (பரப்பளவில் மிகப் பெரிய நாடு என்றால் இதுபோன்ற ஆபத்துகளும் உண்டு!)

சக்ரவர்த்தி பதறினார். ஏற்கெனவே கஜானாவின் நிதி நிலைமை சரியில்லை. திருநங்கைகளின் கெடுபிடிகள் அதிகமான தால் மக்களுக்குப் பெரும் அதிருப்தி. மக்கள் ஆதரவும் இல்லாத நிலையில் தளபதியை அனுப்பி விட்டோமே!

அவசரமாக தளபதியை மீண்டும் அழைத்தார். ஆனால் அதற்குள் நிலவரம் கலவரம் ஆகியிருந்தது. துரோகியான திருநங்கை ஒருவர் பெய்ஜிங்கின் நுழைவுவாயிலை திறந்து விட்டு லீயின் கூட்டம் உள்ளே நுழைய வழி செய்தார்.

சக்ரவர்த்தி மாறுவேடத்தில் வெளியேற முயற்சி செய்தார். ஆனால் கோட்டைக் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. (மீண்டும் துரோகம்). ஆராய்ச்சி மணியை அடித்தார். அப்படி அடித்தால் எல்லா அமைச்சர்களும் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட வரக் காணோம்.

மன்னர் அவமானத்தில் துடித்தார். கோட்டை வளாகத்துக்குள்ளேயே இருந்த ஒரு குன்றின்மீது நின்று ஒரு கடிதத்தை எழுதினார். “என் திறமையின்மையை ஏற்றுக் கொள்கிறேன். என் எதிரிகளே, என் மக்களில் ஒருவரைக்கூட காயப்படுத்தி விடாதீர்கள்’’ இப்படி எழுதிவிட்டு தூக்கு மாட்டிக் கொண்டார்.

பெய்ஜிங்கில் நுழைந்த லீ முடிசூடிக் கொண்டார். அரண்மனையிலிருந்த அழகி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். அதில் கிளம்பின புதிய சிக்கல்கள். அந்த அழகி (மஞ்சூரியர்களை எதிர்க்கச் சென்றிருந்த) வூ-வின் காதலி.

இதை அறியாமல் தளபதிக்கு ஒரு கடிதம் எழுதினார் லீ. “தளபதியே, புதிய சக்ரவர்த்தியான நானும், நீங்களும் சேர்ந்து மஞ்சூக்களை அடக்கி விடலாம்’’.

தன் காதலியைக் கவர்ந்து கொண்ட லீயை மன்னிக்கத் தயாராக இல்லை வூ. கோபத்தில் விபரீதமான முடிவை எடுத்தார். யாரை எதிர்க்கப்படையோடு புறப்பட்டாரோ அந்த மஞ்சூக்களை அணுகி ‘லீயை அழிக்க உதவுங்கள்’’ என்றார்!.

மஞ்சூக்களுக்குப் படு குஷி. சீனத் தளபதியின் ஆதரவுடன் லீயை வெளியேற்றினார்கள்.

ஆனால் வூவின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மஞ்சூக்கள் தன்னையே ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார்கள். அதிகபட்சமாக பதிலுக்கு கப்பம் கேட்பார்கள். இப்படி அவர் நினைத்திருக்க, சீனாவின் ஆட்சிப் பொறுப்பை மஞ்சூக்களே எடுத்துக் கொண்டனர். ஏதோ போனால் போகிறது என்பது போல் ஒரு மாகாண அதிகாரி பதவி வூவுக்கு அளிக்கப்பட்டது.

இதனால் பல திருப்புமுனைகள் சீனாவில் நிகழ்ந்தன. முதன் முறையாக (1644ல்) வெளிநாட்டு சக்திகள் (மஞ்சூக்கள்) சீனாவை ஆளத் தொடங்கின. சீனப் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் இனி அரச பதவி கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டது. சீனப் பெண்கள் வழக்கப்படி உடை அணியலாம். ஆனால் சீன ஆண்கள் மஞ்சூக்களைப் போல்தான் உடை அணிய வேண்டும் என்பவை சட்டங்களாயின.

மஞ்சூக்கள் ஆட்சியில் புதிய விதி ஒன்று அறிமுகமானது. எந்த அதிகாரிக்கும் அவரது மாகாணத்திலேயே பதவி கிடையாது. இதன் மூலம் லஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டது.

தொடக்கத்தில் வடக்கு சீனாதான் மஞ்சூக்களின் வசம் இருந்தது. பின்னர் அது முழுமையான சீனாவுக்குப் பரவியது. முழு சீனாவுக்குமான முதல் மஞ்சூ சக்ரவர்த்தி ஷூன் சி என்பவர். இவர் உலக அளவில் பல விவரங்களை அறிந்திருந்தார். (அப்போதைய சீனாவில் பலரும் நெருப்புக் கோழிகள்தான்).

ஹாலந்து மற்றும் ரஷ்ய தூதர்கள் இவர் அறைக்கு விஜயம் செய்ததுண்டு. கத்தோலிக்க மிஷினரிகளை பரிவுடன் நடத்தினார். தலாய் லாமா கூட இவரது அரசவைக்கு வந்திருக்கிறார்.

இவரது ஆட்சியில் மஞ்சூக்கள் தங்கள் ஆட்சிப் பரப்பளவை கணிசமாக விரிவாக்கிக் கொண்டனர். கொரியா, மங்கோலியா, தைவான் தீவு ஆகியவைகூட அப்போது இவர்கள் வசம் வந்து சேர்ந்தன.

அந்நிய ஆட்சி வந்து சேர்ந்ததே என்று சீனர்கள் துடித்தனர். தவிர அவர்களுக்குத் தலையாய பிரச்னை ஒன்றும் இருந்தது. தங்கள் தலைமுடியை பின்னி சுருட்டி கொண்டையாக முடிந்து கொள்வதுதான் சீன ஆண்களின் வழக்கம். ஆனால் “இரண்டு பின்னல்களாகப் பின்னிதான் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் முன்னொரு காலத்தில் சீனாவின் ஒரு பகுதியை ஆண்டு வந்த மங்கோலியச் சக்ரவர்த்தி. கண்ணாடியில் தங்கள் இரட்டை ஜடையைப் பார்க்கும்போதெல்லாம் சீன ஆண்கள் குமுறினார்கள். அந்நிய ஆட்சியை அந்த இரட்டை ஜடை அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

நாளடைவில் மங்கோலிய ஆட்சி முடிந்து மிங் ஆட்சி (இவர்கள் சீன பரம்பரைதான்) தொடங்கியது. சீனர்களுக்கு சந்தோஷம். பழையபடி தலையைப் பின்னி கொண்டையாக முடிந்து கொண்டார்கள். இந்த காலகட்டத்தில்தான் மஞ்சூக்கள் படையெடுப்பு.

“தலையின் முன் பாதியை ஷேவிங் செய்து கொள்ளுங்கள். பின் பக்கக் குடுமியை ஒற்றைப் பின்னலாக கட்டித் தொங்கவிட்டுக் கொள்ளுங்கள்’’ என்று ஆணையிட்டார் மஞ்சூ சக்ரவர்த்தி ஷூன் சி.

சீன மக்கள் கொதித்தனர். ஆங்காங்கே மோதல்கள் தொடங்கின. இதன் காரணமாக லட்சத்துக்கும் அதிகமான சீனர்கள் உயிரிழந்தனர். பின்னர் ஒருவழியாக ஒற்றைப் பின்னலுக்கு ஒப்புக் கொண்டனர்.

சக்ரவர்த்தி ஷூன் சி இறந்தவுடன், அவரது எட்டு வயது மகன் காங் சி முடிசூடிக் கொண்டார். இவர் திறமைசாலி. வளர்ந்தபின் சீன மொழி அகராதி ஒன்றை உருவாக்கினார். தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். பதினாறு ஒழுக்க விதிகளை உருவாக்கி நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பினார். அறுபது வருட ஆட்சிக்குப் பிறகு 1722ல் இறந்தார். அவரது ஆட்சியை சீனாவின் பொற்காலம் என்று கருதுபவர்கள் உண்டு.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x