Published : 17 Apr 2015 03:57 PM
Last Updated : 17 Apr 2015 03:57 PM
சீனாவில் அரசு ரகசிய ஆவணங்களைக் கசிய விட்ட முன்னணி பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவோ யூ, சீனாவில் வசிக்கும் முன்னணி பெண் பத்திரிகையாளர் ஆவார். இவர் அரசை விமர்சித்துப் பல்வேறு கட்டுரைகள் எழுதி வந்தார். இந்நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் ரகசிய ஆவணங்களை வெளிநாட்டு இணையதளம் ஒன்றுக்குக் கசியவிட்டதாகக் கூறி, கைது செய்யப்பட்டார்.
இவர் கசியவிட்டதாகக் கூறப்படும் அந்த ஆவணம் 'டாக்குமென்ட் நம்பர் 9' என்று பெயர் கொண்டதாகும். அதில் மேற்கத்திய அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமை, கருத்துரிமை போன்ற 'உலக விழுமியங்கள்' உள்ளிட்ட ஏழு விஷயங்களை ஒடுக்க வேண்டும் என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் காவோவுக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவோ இவ்வாறு சிறைப்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 1989ம் ஆண்டு தியானன்மென் போராட்டத்தின்போது 15 மாதங்களும், 1993ம் ஆண்டு இதேபோன்றதொரு ஆவணக் கசிவு விவகாரத்தில் ஆறு ஆண்டுகளும் சிறையில் இருந்தார்.
இதுகுறித்து காவோ கூறும்போது, "நீங்கள் மலைகளையும், நதிகளையும் மாற்றலாம். ஆனால் ஒருபோதும் ஒருவரின் இயல்புகளை மாற்ற முடியாது. ஏற்கெனவே நான் அனுபவித்த ஏழு ஆண்டு சிறைத் தண்டனை, அரசுக்கு எதிரான செய்திகளை எழுதுவதற்கான எனது ஊக்கத்தை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT