Published : 03 Mar 2015 11:11 AM
Last Updated : 03 Mar 2015 11:11 AM

உக்ரைன் விவகாரம்: அமெரிக்கா, ரஷ்யா பேச்சு

உக்ரைன் உள்நாட்டுப் போர் விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரோவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த ஓராண்டாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தற்போது ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் முயற்சியால் அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது இரு தரப்பிலும் பீரங்கி குண்டுகள் வீசப்படுவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

கிளர்ச்சிப் படைகளுக்கு ரஷ்ய அரசு ஆயுத உதவி வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோவும் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் உள்நாட்டுப் போர் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதம் நடத்தினர்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் போரீஸ் நெம்ட்சோவ் அண்மையில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இருவரின் பேச்சு விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x