Last Updated : 12 Mar, 2015 05:09 PM

 

Published : 12 Mar 2015 05:09 PM
Last Updated : 12 Mar 2015 05:09 PM

யூடியூப் பகிர்வு: இருட்டு உங்களுக்கு அச்சம் தந்திருக்கிறதா?

2011-ல் எந்த இடையூறும் நேராத சுகமான சிறிதான வீடு. பின்னிரவில் புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிறான் என்றறிந்து வருகிறார் அவனுடைய தந்தை.

இருட்டின் மீது பயம் நிறைந்து டார்ச் லைட்டுடன் இருக்கும் அவனிடம் ''தூங்கலையா.. தூங்கு பயப்படாதே. எல்லாம் சரியாகிடும்'' என்கிறார்...

அன்று ஏதோ ஒருவகையில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது அவர்கள் வாழ்க்கையில்.

2011ல் இருந்ததற்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு இப்போது 2015ல் காணப்படும் அந்த வீட்டில் எவ்வளவோ வேறுபாடு.

2015ல் கூரைமீதிருந்து வெளிச்சம் சின்னதாக விழுவதைத் தவிர அவர்களின் வீடு இடிபாடுகளின் இருட்டில் சிக்கியுள்ளது. இடுக்குகளைக் கடந்து செல்லும் சற்றே பெரியவனான அந்தச் சிறுவன் டார்ச் ஒளியில் இடிந்த சுவர்களைக் கடந்து அங்குமிங்குமாக ஏதையோ தேடுகிறான்.

அங்கே... கீழே விழுந்திருக்கும் ஒரு சுவர் இடிபாடுகளுக்கு அருகே பயத்துடன் போர்வைக்குள் பதுங்கி நடுங்கியபடி இருக்கிறாள் ஒரு சிறுமி.

அப்போது அந்த வளர்ந்த சிறுவன் சொல்கிறான்... ''பயப்படாதே... எல்லாம் சரியாகிடும்.''

*

உள்நாட்டுப் போரின் காரணமாக ஆயிரக்கணக்கில் தங்கள் உயிரையும் உடமைகளையும் இழந்துள்ளனர் சிரியா மக்கள். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் உள்ள அகதிமுகாம்களை நோக்கி நகர்ந்து போய்க்கொண்டிருக்கின்றனர். அவர்களது வாழ்வாதாரம் மட்டுமல்ல இயற்கை வளங்களும் அற்றுப்போய்விட்டன.

ஒரு தேசத்தின் லட்சணம் செயற்கைக்கோளில் அம்பலமாகியுள்ளது. நாட்டின் குறிப்பிட்ட பிரதேசங்கள் இருளோடிக் கிடக்கும் அவலம் மிகத் துல்லியமாக செயற்கைக்கோளின் வழியே பதிவாகியது தெரியவந்துள்ளது.

நாட்டின் 83 சதவீத வெளிச்சம் நாட்டைக் கடந்து போயே போய்விட அவர்கள் வாழ்வெங்கும் இருள் மண்டியிருக்கிறது என்பதை நெஞ்சையடைக்கும் இக்குறும்படம் சுட்டிக்காட்டுகிறது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை. எல்லாம் சரியாகத்தானிருக்கிறதாம். என்ன ஒரு மனவலிமை. படம் முடிந்த பின் போர் இவ்வுலகுக்கு தேவைதானா என்று கேள்வி ஓர் அம்பாக வந்து நம் மனதை துளைத்துவிட்டுச் செல்கிறது.

உலகமே வேடிக்கைப் பார்க்கப் பார்க்க சிரியா சுடுகாடாக ஆகிக் கொண்டிருப்பதை விளக்கும் ஒன்றரை நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இக்குறும்படம்.