Last Updated : 13 Mar, 2015 05:39 PM

 

Published : 13 Mar 2015 05:39 PM
Last Updated : 13 Mar 2015 05:39 PM

எனது தேர்தல் தோல்விக்கு இந்திய ராவும் காரணம்: ராஜபக்ச

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தனது தோல்விக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பும் முக்கியக் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவின் ஹாங்காக் நகரிலிருந்து வெளியாகும் 'தெற்கு சீனா மார்னிங் போஸ்ட்' இதழுக்கு ராஜபக்ச அளித்த பேட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பயணம் மேற்கொள்ளும் முன்பு (நேற்று முன்தினம்) வெளியானது.

அதில், "அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எனக்கு எதிராக வெளிப்படையாக செயல்பட்டன. இந்திய உளவு அமைபபன 'ரா'வும் எனக்கு எதிராக செயல்பட்டது. என்னை வீழ்த்துவதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையில் உள்ள தங்கள் தூதரகங்களை வெளிப்படையாக பயன்படுத்தின' என்று ராஜபக்ச கூறியிருந்தார்.

முன்னதாக, ராஜபக்ச தோல்விக்குப் பிறகு சர்வதேச செய்தி ஊடகமான ராய்ட்டர்ஸ்சில் வெளியான செய்தியில், ராஜபக்சவுக்கு எதிராக முக்கியக் கட்சிகளை ஓரணியில் சேர்ப்பதற்கு இந்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாகவும், அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியானது.

அதனை இந்திய அரசு அப்போது உடனடியாக மறுத்தது. 'தூதரக அதிகாரி மாற்றப்பட்டது சாதாரண நடைமுறை மாற்றம்தானே தவிர, இதில் அரசியல் எதுவும் இல்லை' என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீது அக்பருதீன் தெரிவித்திருந்தார். ராஜபக்சவும் 'இதில் முழு உண்மை எனக்குத் தெரியவில்லை' என்றார்.

இதுதான் உண்மை: ராஜபக்ச

இந்தச் சூழலில் அவர் இப்போது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சீன பத்திரிகைக்கு அளித்த பேட்டி குறித்து ராஜபக்சவிம் 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழ் பிரத்யேகமாக பேட்டி கண்டபோது அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள்:

"நான் தேர்தலில் தோல்வி அடைவதற்காக, இந்தியப் புலனாய்வு அமைப்பான 'ரா', அமெரிக்கா மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உளவு அமைப்புகளும் செயல்பட்டன.

"முதலில் கொழும்புவில் இருக்கும் 'ரா' தலைமை அதிகாரி வெளியேற வேண்டும் என்றேன். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால், அது மிகவும் தாமதமான காலகட்டம். ஏனென்றால், தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கெனவே நெறுங்கிவிட்டது.

தூதரகங்களைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, நார்வே, ஐரோப்பிய நாடுகள் மற்றும் 'ரா' எனக்கு எதிராக செயல்பட்டது உண்மை" என்று கூறினார்.

'மோடி காரணம் அல்ல'

அதேவேளையில், தேர்தல் தோல்விக்கான பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது மத்திய அரசோ காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

'ரா' அமைப்பு அரசியல் ரீதியிலான ஆலோசனையோடு செயல்பட்டது என்று கூறுகிறீர்களா? என்றதற்கு, "நிச்சயமாக இல்லை. நான் மோடி மீது ஒருபோதும் குற்றம்சாட்டவில்லை. ஏனென்றால், தேர்தல் நடந்த வருடம்தான் அவர் இந்திய பிரதமரானார். ஆனால், இது நீண்ட கால திட்டம். தவறுதலான புரிதலோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அரசியலில் இருந்து ஓய்வா?

அரசியலுக்கு முழுக்குப் போட்டதாக சீன பத்திரிகை குறிப்பிடுகிறதே? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத அவர், இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவையும் குறிப்பிடும் வகையில், "அவர்களது ஆட்சியை ஆதரிக்கவும் துணை நிற்கவும் நினைத்தேன்.

ஆனால், அவர்கள் பிரச்சினை ஏற்படுத்தவும், என்னை சிறையில் அடைக்கவும், எனது பாஸ்போர்ட்டை முடக்கவும் முயற்சித்தனர். இந்த நிலையில், எவ்வாறு நான் ஓய்வெடுக்க முடியும். நான் அரசியலிலிருந்து ஓய்வதாக அவர்களிடம் கூறவில்லை. தவறுதலாக எழுதிவிட்டனர். தற்போது ஓய்வில் உள்ளேன். அவ்வளவுதான்" என்றார் ராஜபக்ச.

நரேந்திர மோடியை சந்திப்பீர்களா? என்றதற்கு, "நாளை (14-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறேன். இதற்கு முன்னர் மோடி இலங்கை வந்தபோது மூன்று முறை அவரைச் சந்தித்துள்ளேன். தற்போது இலங்கை வந்திருக்கும் அவரை மீண்டும் சந்திக்க நினைக்கிறேன்" என்றார்.

சீன கப்பல் விவகாரம்:

உங்களது ஆட்சியின்போது, இலங்கையுடன் சீனா கொண்டிருந்த உறவு மற்றும் கடற்பகுதியில் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் வகையில் சீன கப்பல் நிறுத்தப்பட்டது குறித்து...

"என் ஆட்சியில் இலங்கையில் சீன நிறுவனங்களின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டன. அதேபோல, சீன நீர்மூழ்கி கப்பல்கள் உலகின் எந்த மூலையிலிருந்து இலங்கை கடலுக்கு வந்தாலும், அந்தத் தருணமே நாங்கள் இந்தியாவுக்கு அது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம்" என்றார் ராஜபக்ச.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x