Published : 27 Mar 2015 04:15 PM
Last Updated : 27 Mar 2015 04:15 PM

விமான விபத்து: சந்தேக விமானியின் வீட்டில் ஆதாரங்களை திரட்டியது ஜெர்மன் போலீஸ்

ஜெர்மன் விமானத்தை துணை விமானியே தகர்த்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து அவரது தரப்பிலான சோதனையை ஜெர்மன் போலீஸார் மேற்கொள்கின்றனர்.

சோதனையில் இதுவரை அவர் மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த சாட்சியங்கள் சிக்காத நிலையில், 'முக்கிய ஆவணங்கள்' அவரது வீட்டில் கிடைத்திருப்பதாக ஜெர்மன் போலீஸ் செய்தித் தொடர்பாளர் மார்ஷல் ஃபீபிக் ஏ.எப்.பி. செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது, "எங்களிடம் கிடைத்துள்ள ஆவணங்கள் ஏதேனும் குறிப்பிடத் தகுந்த தகவலை அளிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

துணை விமானி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சில ஆதாரங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்" என்றார். விமானி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து நேர்ந்ததாக ஜெர்மன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனிடையே விமானம் விபத்துக்குள்ளான பிரான்ஸ் நாட்டுத் தரப்பிலும் இணையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேடல் தொடர்கிறது

ஜெர்மனிவிங்ஸ் ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் 150 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தின் உடைந்த பாகங்களும், பயணிகளின் உடல்களும் மலைப்பகுதியில் சிதறி கிடக்கின்றன. அவற்றை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விமானி அறையில் பதிவான குரல் பதிவு மற்றும் கருப்பு பெட்டி தகவல்கள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. விமானி அறையில் பதிவான குரல் பதிவில்,

"இரண்டு விமானிகளில் ஒருவர் வெளியே சென்று விட்டு மீண்டும் திரும்பியபோது விமானிகள் அறை உள்ளே பூட்டப் பட்டு இருந்தது. கதவை தட்டிய போது உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை" என்பதற்கான பதிவு இடம்பெற்றதாக அதிகாரிகள் அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்தனர்.

இதனால், விபத்துக்கு முன்னதாக தலைமை விமானி வெளியில் வந்ததும் துணை விமானி அறையை பூட்டிக்கொண்டு வேண்டுமென்றே விமானத்தை மலை மீது மோதி தகர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x